ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்!
சென்னை: ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து நாளை மறுதினம் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக பெற்றது வெற்றி இல்லை.. ஸ்டாலின் மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்.. என்னதான் சொல்கிறார் ரஜினிகாந்த்?
தலைவர்களுக்கு அழைப்பு
இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்து வருகிறார்.
ஸ்டாலினுக்கு அழைப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
பதவியேற்பில் பங்கேற்பு
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று விஜயவாடாவில் நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள்
மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறும் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் திமுக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் டிஆர் பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.