சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்.. கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி.. பின்னணி இதுதான்!
சென்னை: மருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் பழனிசாமியின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டும் வகையில் அவருக்கு நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக கடந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ துறையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சீரான சுகாதார திட்டங்கள் மற்றும் மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் முன்னோடி செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கணக்கில் அடங்காத பல திட்டங்களை முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா மருந்தகம் போன்ற பல முன்னோடி திட்டங்கள், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. தமிழகம் மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களை விட வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவள விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வெகு சிறப்பான செயல்பாடுதான் இதற்கு காரணம் ஆகும்.
2018-2019-ம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு வரும் நிதியாண்டுக்காக ரூ.12,563 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.925.39 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி வருடா வருடம் சுகாதாரத்துறைக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் தீவிர நடவடிக்கையால் மகப்பேறு இறப்பு விகிதத்தில் 2030-க்குள் அடைய வேண்டிய நிலையான வளர்ச்சி இலக்கினை முன்னதாகவே அடைந்ததற்காக மத்திய அரசின் விருதையும் தமிழகம் பெற்றுள்ளது. மொத்தக் கருவுறு விகிதம் தமிழகத்தில் 1.6 ஆக உள்ளது. இது நாட்டிலேயே குறைவான அளவாகும். அந்த அளவிற்கு தமிழகம் மகப்பேறு விழிப்புணர்வை பெற்றுள்ளது.
அதிமுக அரசு, உலகம் முழுக்க பல நாடுகளை உற்றுநோக்கி, தனது திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன்படி தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை ரூ.1,634 கோடி செலவில் ஜப்பான் கூட்டு முகமையின் கடனுதவியுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.242.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான பணிகள் மத்திய - மாநில அரசுகள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்னும் புதிதாக மூன்று மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது. மேலும் வேலூரில் அரசு மருத்துவமனையில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டு, செயல்பட தொடங்கி உள்ளது. 1,800 மருத்துவர்கள் மற்றும் 2,345 செவிலியர்கள் அரசு சார்பாக வருடந்தோறும் நியமிக்கப்படுகிறார்கள். அதேபோல் மாநிலத்தில் 75 இடங்களில் விபத்து தொடர்பான உயர் சிகிச்சை சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சிறப்பான செயல்பாட்டை தமிழகத்தில் இருக்கும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பாராட்டி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனையையே பாராட்டும் வகையில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டு இருக்கிறது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரியில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார்.
விழாவிற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. முதல்வரின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த பட்டம் அளிக்கப்பட்டது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பழனியப்பன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும்.ஏட்டுக்கல்வி மட்டுமே மாணவர்களுக்கு எப்போதும் உதவாது.
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். விரைவில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இந்த காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதற்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வி படிக்கும் வகையில், புதிய தொழிற்கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாம் கல்வியில் புரட்சி செய்துள்ளோம். மாணவர்கள் இதனால் அதிகமாக உயர் கல்வியில் சேர்கிறார்கள். இதனால் தமிழகம் உயர் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து கல்வி வளர்ச்சி மீதுஅதிமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெருமை அளிக்கிறது, என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
RECOMMENDED STORIES