10% இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசன திருத்தம் செய்தது மோசடியானது- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
கொச்சி: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டது மோசடியானது என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. திமுக,விசிக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே கேரளா மாநிலம் கொச்சியில் கருத்தரங்கு ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி சந்துரு, இந்த 10% இடஒதுக்கீட்டை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக நீதிபதி சந்துரு பேசுகையில், முற்படுத்தப்பட்ட அல்லது பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் ஏழைகளாக இருப்போருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் செய்திருப்பது மோசடியானது.
10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு தடையாக இருக்கக் கூடியது. இதை ஏற்கவோ, ஆதரிக்கவோ முடியாது. நமது நாட்டில் 2,000 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது முற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவும் இல்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு எனில் ஏன் ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இதில் அடங்கவில்லை? நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார்.