மேயர் வேட்பாளர்கள் இருவரும் தோல்வி.. கொச்சி மாநகராட்சியில் தீப்தி மேரி வர்கீஸ் மேயராவாரா?
கொச்சி: கொச்சி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியின் இரண்டு மேயர் வேட்பாளர்களும் தோற்றதால் தீப்தி மேரி வர்கீஸ்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருப்பதால் தீப்தி மேரி வர்கீஸ் மேயராக அதிக வாய்ப்பு உள்ளதாக கேரள ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இறுதிகட்ட முன்னணி நிலவரங்கள் இடதுசாரி கூட்டணிக்கோ, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கோ சாதகமான நிலை வாராமல் கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கேரள ஊடகங்கள் சொல்கின்றன.
கேரளாவில் கொச்சி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய என்.வேணுகோபால் ஒரு ஓட்டில் தோற்றார். இதனிடையே தொடர்ந்து துணை மேயர் கே.ஆர். பிரேம்குமாரும் தோல்வியை தழுவியுள்ளார். இதற்கிடையே யுடிஎஃப் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நம்பிக்கை நிலவும் நிலையில், இருவரும் தோல்வியை தழுவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி மாநகராட்சியில் தற்போதைய நிலையில் யுடிஎஃப் 31 இடங்களில் வென்றுள்ளது, எல்.டி.எஃப் 28 இடங்களில் வென்றுள்ளது. மேலும் ஆறு இடங்களில் வென்றால் யுடிஎஃப் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்ற நிலை உள்ளது.
கேரளா உள்ளாட்சி தேர்தல்.. இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றியை பெறும்- கொடியேறி பாலகிருஷ்ணன்
இந்நிலையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ ஐந்து இடங்களிலும், சுயேட்சைகள் ஆறு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் யு.டி.எஃப் இன் தீப்தி மேரி வர்கீஸ் வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு கொச்சி மாநகராட்சியின் மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மேயர் வேட்பாளர் வேணுகோபால் தோல்வி அடைந்திருப்பதால் யுடிஎப் கூட்டணி மிகுந்த அப்செட்டில் உள்ளது.