முன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்
கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கொச்சி: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் பிராங்கோ முலக்கல் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.
அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது பெயிலில் வந்துள்ளார். இவர் வாடிக்கன் சர்ச் மூலம் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அல்பி, அனுபமா, ஜோசபின், அன்சிட்டா ஆகிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இருவரும் பீகாருக்கும், ஒருவர் பஞ்சாப்பிற்கும், ஒருவர் கண்ணூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற வருடம் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
இவர்கள் கேரளா தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம் முன்பும் கூட போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பின்பே பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதமே, பணியிட மாற்றம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்போது அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் குருவிலங்காடு கான்வெண்டில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.