யானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு
கொச்சி: கேரளாவில், யானை பலியான சம்பவத்தில் அனாவசியமாக மத பிரச்சினையை கிளப்பி இப்போது வம்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான, மேனகா காந்தி. அவர்மீது, கலவரத்தை தூண்டும் முயற்சி என்ற சட்டப் பிரிவின்கீழ், காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று பலியானது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதன் வாயில் வெடி பொருட்களால் காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது.
அன்னாசிபழம் மூலமாக வெடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்
கைதான நபர் வாக்குமூலம்
கைதான நபர் அளித்த வாக்குமூலத்தில், காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக தேங்காய்க்குள் வெடி வைத்திருந்ததாகவும், அதைத் தான் யானை சாப்பிட்டிருக்க கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தநிலையில் மேனகா காந்தி இந்த கைது நடவடிக்கைக்கு முன்பே சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
மேனகா காந்தி சர்ச்சை கருத்து
யானை கொல்லப்பட்ட சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றதாகவும், அந்த மாவட்டத்தில் இதற்கு முன்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு எதிராக கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட வரலாறு நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆதாரமில்லாத இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மலப்புரம் மாவட்டம் என்பது முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாகும். பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மலப்புரம் மாவட்டம் என்று மேனகா காந்தி குறிப்பிட்டது உள்நோக்கத்துடன் கூடியது என்று சர்ச்சைகள் எழுந்தன.
மத்திய அமைச்சர் ஜவடேக்கர்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலும், மலப்புரம் மாவட்டத்தில் யானை கொல்லப்பட்டதாக அழுத்தந்திருத்தமாக தெரிவித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான எச்.ராஜா இன்னும் ஒருபடி மேலே போய், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மதவெறியனால், யானை கொல்லப்பட்டது என்று ட்விட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார்.
மேனகா காந்தி மீது வழக்கு
இந்த நிலையில்தான் இந்த விவகாரம் மதச் சாயம் பூசப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதனிடையே மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் அளித்த புகாரின் பேரில் மலப்புரம் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 153 வது பிரிவின் கீழ் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே தூண்டும் முயற்சிக்கான சட்டப்பிரிவு இதுவாகும்.
யானை நடமாடும் பகுதிகளில் வீடுகள்
மலப்புரம் போலீஸ் கண்காணிப்பாளர் அப்துல்கரீம் கூறுகையில், பல்வேறு புகார்கள் மேனகா காந்திக்கு எதிராக வந்த வண்ணம் இருப்பதால் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். யானைக்கு வாயில் வெடிமருந்து ஊட்டவில்லை, பன்றியை விரட்ட வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தை சாப்பிட்டு யானை உயிரிழந்துள்ளது. யானை நடமாடும் பகுதியில் கிராமங்கள் அமைந்துள்ளதால் ஏற்பட்ட விபரீதம் இது. ஆனால் பாஜக இதை மத பிரச்சனையாக மாறிவருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையேயான மோதலாகத்தான் இது பார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.