Maradu: முதலில் 19 மாடிகள்.. அடுத்தடுத்து 3 கட்டடங்கள்.. வெடி வைத்து தரைமட்டம்.. பரபரத்த கேரளா!
மரடு குடியிருப்பு தகர்க்கும் பணி ஆரம்பமாகி உள்ளது
Recommended Video
கொச்சி: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே.. கேரளாவில் 19 அடுக்கு மாடிக் குடியிருப்பு வெடி வைத்து தகர்க்கப்பட்டு விட்டது. மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று ஒரு கட்டடம் தகர்க்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ளது மரடு பகுதி.. இங்கு கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டும் ஹெச் டூஓ ஹோலி பெய்த், ஆல்பா செரைன், ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் வெடி வைத்து இடிக்குமாறு உத்தரவிட்டது.
#WATCH Maradu flats demolition: H2O Holy Faith apartment tower demolished through controlled implosion #Kerala pic.twitter.com/fKbciLGH14
— ANI (@ANI) January 11, 2020
காலையில் இடிப்பு
இதையடுத்து, அந்த கட்டிடத்தை இடிப்பதற்கான பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், குடியிருப்பை இடிக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்கே, குடியிருப்புகளை இடிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவும், அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர்.
தடை உத்தரவு
முன்னதாக, அந்த பகுதியின் அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. அது மட்டுமல்ல.. எல்லோருமே அந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறி விட்டனரா என்று போலீசார் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனையிட்டனா். எல்லா வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கரண்ட் கட்
அதேபோல, வீட்டில் எந்த எலக்ட்ரிக் பொருட்கள் இருந்தாலும் அதை அணைத்துவிட்டு போகும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒருவேளை ஆளில்லா விமானங்கள் பறந்தால் அது சுட்டு வீழ்த்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
வெடி வைத்து
இத்தனை ஏற்பாடுகளுக்குப் பின்னர் இன்று முதல் கட்டடம் சற்று முன்பு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் உள்நோக்கி இடிந்து விழும் தொழில்நுட்பம் மூலம் இடிக்கப்படுகின்றன. முதல் கட்டடமும் அவ்வாறே இடிக்கப்பட்டது. 9 விநாடிகளில் முதல் கட்டடம் பொலபொலவென்று நொறுங்கி விழுந்து அந்த இடமே புகை மண்டலமானது.
3 கட்டடம் இடிப்பு
3 முறை சைரன் ஒலிக்க விடப்பட்டு முதல் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் 2 கட்டடங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தகர்க்கப்பட்டன. இதுவரை மொத்தம் 183 வீடுகள் இந்த 3 கட்டடங்கள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இந்த தகர்ப்பின் மூலம் அருகாமை பகுதிகளில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை
வேடிக்கை பார்த்த மக்கள்
அடுத்தடுத்து 3 கட்டடங்களை வெடி வைத்துத் தகர்த்த காட்சியை சுற்றிலும் உள்ள கட்டடங்கள் மற்றும் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த கட்டட இடிப்பு சமூக வலைதளங்களிலும் வைரலானது. டிவிட்டரில் பலர் இதை வரவேற்றும், பலர் இதை இடிக்காமல் ஏழை பாழைகளுக்கு ஏதாவது செய்ய பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.