கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் வேணுகோபால், பாஜக வேட்பாளரிடம் ஒரு ஓட்டில் தோல்வி
கொச்சி: கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மேயர் வேட்பாளர் வேணுகோபால் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். அதேநேரம் கொச்சி மாநகராட்சியை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கூட்டணி முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் அண்மையில் நடந்து முடிந்தது. முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலையில் கொச்சின், திருச்சூர், கண்ணூர் மாநகராட்சிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். முன்னிலை கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதேநேரம் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவு LIVE Updates: எல்.டி.எஃப் கூட்டணியிடம் திணறும் யு.டி.எஃப். கூட்டணி..!
யு.டி.எஃப். முன்னிலை
கொச்சி மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் 31 இடங்களில் யு.டி.எஃப். முன்னிலை வகிக்கிறது. 28 இடங்களில் எல்.டி.எஃப். முன்னிலை வகிக்கிறது.; 6 வார்டுகளில் பாஜக வெற்றி ; 5 வார்டுகளில் சுயேட்சைகள் முன்னிலை வகிக்கிறது.
மேயர் வேட்பாளர் தோல்வி
கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் கூட்டணி மேயர் வேட்பாளர் வேணுகோபால் வடக்கு தீவு (நார்த் ஐலாண்ட்) வார்டில் ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளரிடம் தோற்றுப்போனார். இது யு.டி.எஃப். முன்னிலை கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பறிபோன வாய்ப்பு
கொச்சி மாநகராட்சி தேர்தலில் வேணுகோபால் வெற்றி பெற்று யுடிஎஃப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தால், இந்த முறை கொச்சி கார்ப்பரேஷனின் மேயராக அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. முன்னதாக கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்தின் (ஜி.சி.டி.ஏ) தலைவராக இருந்தார்.
மீண்டும் வாக்கு எண்ணிக்கை
இப்போது வேணுகோபால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை டெக்னிக் மிஸ்டேக் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறிவருகிறார்கள். கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மறுப்பு மறுவாக்கு எண்ணிக்கை கோருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்கள்.
கட்சிக்குள் அதிருப்தி
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களே வேணுகோபால் தோல்விக்கு வழிவகுத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில், நான்கு யுடிஎஃப் கூட்டணியின் அதிருப்தியில் இருந்த நான்கு பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கொச்சின் மாநகராட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.