வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு.. பலர் பலியானதாக அச்சம்
கொச்சி: வயநாடு எல்லையில் உள்ள மெப்பாடியில் உள்ள புதுமலா என்ற இடத்தில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பலர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கிய மக்கள், உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும், மழை மற்றும் வெள்ளத்தால், அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் அந்த பகுதியை அடைய முடியவில்லை
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் பல கட்டடங்கள் தெரிகின்றன. இதில் வைதிரி தாலுகாவில் புதுமலா பகுதியிலுள்ள ஒரு மசூதி உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற காட்சிகள் உள்ளன.
இப்பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் பாதிப்பு அளவு குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மசூதி, கோயில், வீடுகள் மற்றும் இரண்டு பெரிய தற்காலிக தங்குமிடங்கள், இடிந்து விழுவது போன்றும் காட்சிகள் உள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, கண்ணூரில் இருந்து வயநாடுக்கு ராணுவ வீரர்கள் விரைந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.