காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை
கொச்சி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அச்சறுத்தலாக உள்ளனர் என்று ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனே தெரிவித்தார். காஷ்மீரில் ஜனநாயகத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானின் பகுதியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் திட்டத்தை ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறிய தாக்குதல் மூலம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. கிழக்கு லடாக் பகுதிகளில் சீனாவின் அடாவடிதனத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது
கேரளாவில் நரவனே
இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனே கேரள மாநிலத்தில் எஜிமாலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடந்த அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு இன்று அனைத்து தரப்பில் இருந்தும் சவால்களை எதிர்கொள்கிறது. சில அச்சறுத்துதல் உள்நாட்டில் இருந்தும் வருகின்றன. அண்டை நாடுகளில் இருந்தும் நமக்கு அச்சறுத்துதல் வருகின்றன.
மேற்கு எல்லையில் அச்சுறுத்தல்
நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகள் பலமான தூண்களாக உள்ளன. மேற்கு எல்லைகளில் தற்போதைய நிலைமை கவலைப்படும் வகையில் உள்ளது. பயங்கரவாதிகள் அங்கு தொடர்ந்து அச்சறுத்தி வருகின்றனர். சர்வதேச எல்லை பகுதிகளில் உள்ள சுரங்கங்கள், மற்ற பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் நமது எல்லைக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர்.
ராணுவ வீரர்கள் முறியடிக்கின்றனர்
குளிர்காலம், மோசமான வானிலை நிலவுவதால் ஊடுருவல்களை தடுப்பது கடும் சவாலாக உள்ளது. ஆனாலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து இதனை முறியடித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு
காஷ்மீரில் நிலவும் ஜனநாயகத்தை சீர்குலைப்பதில் பயங்கரவாதிகள் ஆர்வமாக உள்ளனர். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது. இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவதற்காக பயங்கரவாதிகளுக்கு அந்நாடு ஆதரவு அளித்து வருகிறது. இவ்வாறு ராணுவ தளபதி நரவனே கூறினார்.