பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்!
கேரளாவில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
கொச்சி: கேரளாவில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் பிராங்கோ முலக்கல் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.
அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது பெயிலில் வந்துள்ளார்.
மரணம் அடைந்தார்
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்தார். பிராங்கோ பெயிலில் வந்த அடுத்த நாள் குரியகோஸ் மரணம் நிகழ்ந்து இருக்கிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளியேறினார்கள்
இந்த நிலையில் நேற்று குரியகோஸ் இறுதிச்சடங்கு நடந்தது. இதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பாதிரியார்கள் வந்து இருந்தனர். குரியகோஸ் பணியாற்றிய தேவாலயத்தில் பணியாற்றிய கன்னியாஸ்திரிகளும் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். முக்கியமாக பிராங்கோவிற்கு எதிராக களமிறங்கி இருக்கும் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர்.
என்ன நடந்தது
ஆனால் இவர்கள் யாரும் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அங்கு முதலில் உள்ளே அனுமதிக்கப்பட்ட இவர்கள், பின் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு உள்ளனர். சில கன்னியாஸ்திரிகளை அங்கிருந்த ஆட்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி உள்ளனர். இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கண்ணீருடன் வெளியேறினார்கள்.
சூழ்நிலை
அங்கிருந்து செய்தியாளர்களும் உடனடியாக வெளியே அனுப்பப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் அருகாமையில் இருந்த மக்கள் வந்து தேவாலய நிர்வாகிகளுடன் கடுமையான வாக்குவாதம் செய்தனர். கன்னியாஸ்திரிகளை வெளியேற்றியது தவறு என்று கடுமையான வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த கன்னியாஸ்திரிகளில் சிலர், பிராங்கோவிற்கு எதிரான முக்கிய சாட்சியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.