சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு தாங்க ... கேரள போலீஸிடம் மனு அளித்த ரெஹானா பாத்திமா
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய கேரள பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா இந்த ஆண்டு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி கேரள போலீஸிடம் மனு அளித்துள்ளார்
சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்குச் செல்ல பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இருமுடி கட்டி
இதையடுத்து கடந்த ஆண்டு கேரள மாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவரை போலீஸார் பாதுகாப்புடன் மலைக்கு அழைத்துச் சென்றனர்.
திரும்பி அழைத்தனர்
ஆனால், சபரிமலையில் கடும் போராட்டம் நடந்ததால், பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு ரெஹானாவை கோயிலுக்கு அழைத்துச் செல்லாமல் பாதியிலேயே திருப்பி அழைத்துச்சென்றார்கள்.
தடையில்லை
இந்த சூழலில், சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவின் மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதே சமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
அனுமதியில்லை
இருந்த போதிலும், சபரிமலைக்கு விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் போவதில்லை என்றும் நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கே பாதுகாப்பு அளிப்போம் என்றும் கேரள அரசு அறிவித்தது.
போலீஸ் தள்ளுபடி
இந்நிலையில் சபரிமலைக்கு வந்த பெண்கள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கேரள பெண் ஆர்வலரான ரெஹானா பாத்திமா சபரிமலைக்குச் செல்ல தனது போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி கொச்சி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் கேரள அரசின் உத்தரவுப்படி விளம்பர நோக்கில் வருபவர்களுக்கும், உச்ச நீதிமன்ற அனுமதியின்றி வருபவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.