சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு சிக்கல்.. வீடு திரும்ப முடியாமல் தலைமறைவு
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்திற்கு, பக்தர்களின் எதிர்ப்பை மீறி சென்று தரிசனம் செய்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரு பெண்மணிகள் தலைமறைவாக உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிந்து என்ற 40 வயது பெண்மணி மற்றும் குடிமைப் பணியில் உள்ள 39 வயதாகும் கனகதுர்கா ஆகிய இருவரும் ஜனவரி 2ம் தேதி அதிகாலையில் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் .
முதல் பெண்கள்
பதினெட்டு படிகளை ஏறிச் செல்ல முடியவில்லை என்ற போதிலும், சன்னிதானம் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்த முதல் குறைந்த வயதுப் பெண்கள் என்ற பெயர் இருவருக்கும் கிடைத்துள்ளது.
மிரட்டல்கள்
இந்த தகவல் வெளியான பிறகு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடமிருந்து இவ்விரு பெண்களுக்கும் மிரட்டல்கள் வரத் தொடங்கியது. இதையடுத்து இதுவரை அந்த பெண்கள் இருவருமே தங்கள் வீடுகளுக்கும், பணியிடங்களுக்கும் செல்ல முடியவில்லை.
தொலைபேசி பேட்டி
கொச்சி அருகே ஓரிடத்தில் அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்தபடி தொலைபேசியில், செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர் அவர்கள்.
நம்பிக்கை
"எங்களுக்கு அச்சம் இருந்தது. இருந்தபோதிலும் ஐயப்பன் சன்னதிக்குள் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சென்றோம். நான் கேரள அரசையும், காவல் துறையையும் ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.