'வந்தே பாரத் மிஷன்' முதல் வெற்றி.. இரவோடு கொச்சி, கோழிக்கோடு வந்து இறங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்
கொச்சி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கி தவித்த மொத்தம் 363 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு, முதல் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், முறையே, கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் இன்று இரவு தரையிறங்கியது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சர்வதேச லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆபரேஷன் இதுவாகும்.
முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபியில் இருந்து புறப்பட்டது, அதைத் தொடர்ந்து அதே விமான நிறுவனத்தின் மற்றொரு விமானம் துபாயிலிருந்து கிளம்பியது. இதற்கிடையில், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவும் மாலத்தீவை அடைந்துள்ளது. கப்பல் வழியாகவும், இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் கிட்டத்தட்ட 15,000 இந்தியர்களை, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு அழைத்துவர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 12 நாடுகளில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்கும், மூன்று கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தும். "வந்தே பாரத் மிஷன்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவுக்கும், தலா 11 விமானங்கள் தமிழகம் மற்றும் டெல்லிக்கும், தலா 7 மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ளவை குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கும் செல்லும்.