மோடியே ஜாதி பெயர்தான்.. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக அநீதி.. தம்பிதுரை காட்டம்
Recommended Video
கோவை: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்று லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க லோக்சபாவில் நேற்று மத்திய அரசு சட்ட மசோதா தாக்கல் செய்தது. விவாதத்திற்கு பிறகு, இந்த சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. முன்னதாக அதிமுக சார்பில் இந்த மசோதாவிற்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தம்பிதுரை, சமூக அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார். பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் டெபாசிட் செய்து விட்டால், வறுமை ஒழிந்து விடப்போகிறது.. பிறகு இட ஒதுக்கீடுக்கு தேவை இருக்காது என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
சொன்னபடி ரூ.15 லட்சம் தாங்க... 10% இடஒதுக்கீடு தேவையே இல்லை.. தம்பிதுரை பொளேர்
தம்பிதுரை பேட்டி
இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது: கீழ் ஜாதி, மேல் ஜாதி என்ற உணர்வை ஒழிக்க வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொள்கை.
பெரியார் சமூக நீதி
இதன் பிறகு பெரியார், ஜாதிக் கொடுமைக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். வர்ணாசிரம தர்மப்படி, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வகுத்துள்ளனர். வேதம் ஓதுபவர்கள் பிராமணர்கள். நாட்டை ஆள்பவர்கள் சத்திரியர். வியாபாரம் செய்பவர்கள் வைசியர். மற்ற தொழில் செய்யும் அனைவரும் சூத்திரர்கள். அப்படி என்றால் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான். நாலாம் தர மக்கள் நாம். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகதான் பெரியார் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தினார்.
ஜாதி அடிப்படை
எனவேதான் அம்பேத்கர் போன்ற, நமது சட்டத்தை இயற்றிய முன்னோடிகள் அனைவருமே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, ஜாதி கொடுமை ஒழிய வேண்டுமானால் ஜாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றினர். பிறப்பால் நாம் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்றால் அதை பிற்காலத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. பொருளாதாரம் என்பது அப்படியானது இல்லை. எனவே ஜாதி அடிப்படையில்தான், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலியார் என்றால் இறுதிவரை அவர் முதலியாராகத்தான் இருக்க முடியும், நாடார் என்றால் நாடாராகத்தான் இருக்க முடியும். வன்னியர் என்றால் வன்னியர் ஆகத்தான் இருக்க முடியும். இது நமது நாட்டில் உள்ள ஒரு பெரும் கொடுமை.
ஜாதி பெயர்
தமிழகத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டதால்தான், ஜாதி பெயரை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதில்லை. நான் தம்பிதுரை என்றுதான் பெயரை சொல்கிறேனே தவிர, தம்பிதுரை கவுண்டர் என சொல்வதில்லை. பிற மாநிலங்களில் பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட ஜாதி பெயரை பின்னால் போட்டுக் கொள்கிறார்கள். பிரதமர் மோடி பெயர் கூட நரேந்திரா என்பதுதான். மோடி என்பது ஜாதிப் பெயர் தான். ஆனால் நாம் தான் இதில் முன்னோடி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.