கோவையில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் - தொடர் கண்காணிப்பு
கோவையில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Recommended Video
கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கிஷாந்த் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இரு தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள அங்கன்வாடி முகாமில் அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்று மாலையே அந்த குழந்தை உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு ஒரு வாரமாக சளி, நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் அந்த பாதிப்பினால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சவுரி பாளையத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒன்றும் தடுப்பூசி போட்டு கொண்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் பரவியதால் அச்சம் எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசியையும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தடுப்பூசி போட்டு கொண்டதால் 2 குழந்தைகள் இறந்ததாக வந்த தகவல் தவறு. தடுப்பூசியின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்ய தனி குழு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிக்க தனி கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.