கதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு
யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
கோவை: தொழிற்சாலையின் கதவை உடைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே நுழைகிறது அந்த ஒற்றை யானை... இரண்டே நாளில் இரண்டு பேரின் உயிரை காவு வாங்கிய இந்த முரட்டு யானையை கண்டு கோவை மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, கணுவாய், தடாகம், ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி ஊருக்குள் சாப்பாடு, தண்ணி தேடி வந்துவிடும். அந்த சமயங்களில் விளைநிலங்களுக்கு சேதத்தையும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.
இப்படித்தான் ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்துள்ளது. பன்னிமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாகவே இந்த யானை சுற்றி வருவதாக சொல்லப்பட்டது. அப்போது சீரியஸாக இந்த விஷயம் பார்க்கப்படவில்லை.
பாதுகாப்பு பணி
ஆனால், பன்னிமடை சஞ்சீவ் நகரை சேர்ந்த 27 வயது கணேசன் என்பவரை இந்த ஒற்றை காட்டுயானை நேற்று முன்தினம் அடித்தே கொன்றுவிட்டது. இதையடுத்துதான் ஊர் மக்கள் நடுங்க ஆரம்பித்தனர். விஷயம் அறிந்து வனத்துறையினரும் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காட்டு யானை
இந்நிலையில் நேற்று இரவு தொப்பம்பட்டி சிஆர்பிஎப். கல்லூரி வழியாக இந்த ஒற்றை யானை இறங்கிவிட்டது. அந்த பகுதியில் சுற்றி திரிந்து, கணபதி கார்டன் அருகே வந்தது. அந்த இடத்தில், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், பிரேம் கார்த்திக் ஆகிய 2 இளைஞர்களும் நின்று பேசி கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் ஆவேசமாக காட்டு யானை ஓடி வந்தது.
பரிதாப பலி
இதை பார்த்ததும் 2 இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் விக்னேஷ் தப்பி ஓடிவிட்டாலும், பிரேம் கார்த்திக் யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை தனது துதிக்கையாலேயே சுழற்றி சுழற்றி காலில் போட்டு மிதித்தது யானை. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
பீதி
27 வயதான பிரேம் கார்த்திக் குனியமுத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்தவர். எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இருந்தாலும், இப்படி அடுத்தடுத்த 2 நாளில் 2 பேரை காட்டுயானை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி
இதனிடையே, தொழிற்சாலையின் கதவை உடைத்துக்கொண்டு இந்த காட்டு யானை உள்ளே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து ஊர்மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர். எனினும் விரைவில் யானையை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை அளித்துள்ளனர்.