2வது நாளாக சோதனை... எஸ்பி வேலுமணியின் ஆதரவாளரான சந்திரசேகரை விடாத வருமான வரித்துறை
கோவை: நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகரின் வீடு அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் இன்று 2வது நாளாக சோதனை தொடர்கிறது.
நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்.
கோவை வடவள்ளியை சேர்ந்த சந்திரசேகர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
டெல்லி தந்த கிரீன் சிக்னல்! 14 மணி நேரம்.. வேலுமணி நண்பர் வீட்டை சல்லடை போட்ட ஐடி.. நடந்தது என்ன?
வருமான வரி சோதனை
என்ஜினியரான சந்திரசேகர் கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகள் மட்டுமின்றி ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று திடீரென்று கோவையில் சந்திரசேகரின் வீட்டில் வருமான விரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இதேபோல் அவிநாசி சாலையில் உள்ள அவரது அலுவலம், வடவள்ளியில் உள்ள சந்திரசேகரின் சகோதரர் வீடு, பிஎன் புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
2வது நாளாக சோதனை
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் சந்திரசேகருக்கு நெருக்கமானவர்களின் வீடு, பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போதும் முக்கிய ஆவணங்கள் கைபற்ற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன் லஞ்ச ஒழிப்பு சோதனை
இதற்கு முன்பு எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அருப்புக்கோட்டையிலும் ரெய்டு
முன்னதாக நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டடை அனந்தபுரி நகரில் செய்யாத்துரையின் வீடு, அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இவர் அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறையின் சாலை பணியை டெண்டர் எடுத்து மேற்கொண்டு வந்தார். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.