தனியார் கொரோனா பரிசோதனை மையங்களில் நடக்கும் மோசடி.. உஷார்.. கோவையில் சிக்கிய 4 டெஸ்ட் மையங்கள்
கோவை: இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இதை பயன்படுத்தி லாபம் பார்க்கும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பரிசோதனை மையங்களில் நடைபெறும் ஒரு நூதனமான முறைகேடு பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு பரிசோதனை அதிகமாக நடைபெறுகிறது என்று அரசு ஒரு சாதனையாக கூறி வருகிறது.
நேற்று மட்டும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 15,000 என்ற அளவுக்கு இருந்த பரிசோதனை அளவு இப்பொழுது தினமும் 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் என்று சென்று கொண்டு உள்ளது.
கொரோனா லாக் டவுன் தளர்வு - காஞ்சிபுரத்தில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை
அதிக பரிசோதனை மையங்கள்
தமிழகத்தில் மொத்தமாக 95 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 49 பரிசோதனை மையங்கள் அரசு சார்பிலும் 46 பரிசோதனை மையங்கள் தனியார் சார்பில் இயங்கி வருகின்றன. இதில் தனியார் ஆய்வகங்களில்தான் முறைகேடுகள் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளன.
போலி கணக்கு
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக, பரிசோதனை செய்வது போல போலியாக கணக்கு காட்டி, காப்பீடு திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு ஆய்வகங்கள் முயற்சி செய்கின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள நான்கு தனியார் ஆய்வகங்களில் இதுபோன்ற மோசடி கண்டறியப்பட்டு அவை கொரோனா பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம்
போலி அடையாள அட்டைகளை வைத்து முறைகேடாக கணக்கு காட்டி இவ்வாறு மோசடி நடந்துள்ளது. கோவையிலுள்ள பிரபலமான 4 தனியார் ஆய்வகங்கள் பரிசோதனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் காரணமாக பரிசோதனை அதிகமாக நடைபெற்றது என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் பரிசோதனை குறைவாக இருக்கும்.
உஷார்
அரசின் கருவூலத்திற்கு நஷ்டம் என்பது ஒருபக்கம் என்றால், போலியான புள்ளிவிவரத்தின் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் எதிரான போரில் நாம் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட கூடும். எனவே இதில் விழிப்புடன் இருப்பது அவசியம்.