குழந்தை கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் நிம்மதி.. அப்பதான் கொண்டாடுவோம்.. பொங்கலை புறக்கணித்த கிராமம்!
சிறுமி கிடைக்காததால் பொங்கலை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்
கோவை: "குழந்தை இன்னும் கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் எங்களுக்கு நிம்மதி.. அப்பதான் நாங்க பண்டிகையே கொண்டாடுவோம்" என்று பொங்கல் பண்டிகையை புறக்கணித்த கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார் - கவிதா. இவர்கள் விசைத்தறி கூலி தொழிலாளர்கள். இவர்களின் 2-வது குழந்தைதான் சாமினி. 4 வயது குழந்தை இவள்.
கடந்த அக்டாபர் 5-ம் தேதி வீட்டுக்கு பக்கத்தில், மற்ற பிள்ளைகளோடு தெருவில் விளையாடி கொண்டிருந்தவள், வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் சாமினி கிடைக்கவே இல்லை. அதனால் சூலூர் போலீசில் புகார் தந்தனர்.
ஷேர் ஆட்டோவில்.. பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பின்னால் உட்கார்ந்திருந்த 2 இளைஞர்கள் செய்த காரியம்.. ஷாக்
போலீசாரும் போஸ்டர்களை ஒட்டி குழந்தையை தேடி வருகிறார்கள்.. இன்னும் ஒரு துப்புகூட கிடைக்கவில்லை.. தினந்தோறும் சாமினிக்கு என்ன ஆச்சோ என்று ஒவ்வொரு பகுதியாக பெற்றோரும், குடும்பத்தாரும் தேடி வருகின்றனர். கிணறு, குட்டை, ஏரி, புதர்களில் இந்த பெற்றோர் பதறியடித்து கொண்டு பார்க்கும்போது நெஞ்சம் கனத்து போகிறது என்கிறார்கள் கிராம மக்கள்.
இப்படித்தான் போன வருடம் ஹரிணி பாப்பா காணாமல் போய், பொது மக்களின் ஒத்துழைப்புடன் திரும்ப கிடைத்து விட்டாள். அதுபோலவே இந்த முறையும் சாமினியை தேடும் முயற்சியில் மக்கள் உதவ முன் வரமாட்டார்களா என்ற ஏக்கம் தலைதூக்கி உள்ளது.. எப்படி ஹரிணி பாப்பாவை மீட்க கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் அமைப்பினர் முயன்றார்களோ, அதுபோலவே சாமினியையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை காணாமல் போய் இந்த 4 மாதத்தில், தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வந்து போய்விட்டன.. ஆனால் சாமினி கிடைக்காததால், தீபாவளியை இந்த கிராம மக்கள் புறக்கணித்தனர்.. அதுபோலவே இந்த பொங்கலையும் புறக்கணித்துள்ளனர்.. குழந்தை திரும்பவும் கிடைச்சால்தான் எங்களுக்கு பண்டிகையே என்கிறார்கள் குடும்பத்தினரும், கிராம மக்களும்!
ஆனால், சாமினியின் அம்மாவைதான் சமாதானம் செய்யவே முடியவில்லையாம்.. சரியாக சாப்பிடுவதும் இல்லை.. எந்நேரேமும் குழந்தையின் போட்டோவையும், அவளுடைய துணியையும் இறுக அணைத்து கொண்டு கண்ணீருடனே தவித்து வருகிறாராம்!