பிறந்த குழந்தையை பார்க்க ஆசையாக சென்ற உறவினர்கள்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி
கோவையை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
Recommended Video
கோவை: பிறந்த குழந்தையை பார்க்க ஆசை ஆசையாக சென்ற உறவினர்கள் கோரமான சாலை விபத்தில் சிக்கினர். இதில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 7 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், அதை பார்ப்பதற்காக, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கிளம்பியது.
மொத்தம் 12 பேர் ஒரு ஆம்னி வேனை பிடித்து பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர்தான் அந்த வேனை ஓட்டினார்.
தமிழக எல்லையான வாளையாறை கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், ரோட்டோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம், ஆலுவா ஷூஃபியா, ஷெரின், ரியான் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் குழந்தைகளும் அடக்கம்.
வேனில் பயணித்த 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இவர்களை மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற வாளையாறு போலீசார் 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.