எக்கோ பிரெண்ட்லி வாகன எஞ்சின் கண்டுபிடிப்பு.. தமிழர் அசத்தல் சாதனை.. கவுரவப்படுத்திய ஜப்பான்
கோவை: தமிழகத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத டிஸ்டில்ட் வாட்டரில் இயங்கும் வாகன இயந்திரத்தை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஞ்சினியரான சவுந்தரராஜன் குமாரசாமி என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர். இவர் வடிவமைத்துள்ள எஞ்சினானது தனித்துவமானது. எப்படியெனில் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி காற்றுக்கு மாசில்லாத ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
இவருடைய கண்டுபிடிப்பின்படி வாகனத்தில் உள்ள இன்ஜினே தேவையான ஹைட்ரஜனை தயாரித்துக் கொள்ளும். வாகனத்தில் இருந்து வெளிவரும் புகை கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனாக வரும்.
இந்த தனித்துவமிக்க இயந்திரத்தை வடிவமைக்க தமக்கு 10 ஆண்டுகள் ஆனதாக பொறியாளர் குமாரசமி கூறியுள்ளார். உலகிலேயே இத்தகைய கண்டுபிடிப்பு இதுவே முதல் முறையாகும் என கூறியுள்ளார்.
தாம் கண்டுபிடித்துள்ள இந்த புதிய வகை எஞ்சின் ஜப்பான் நாட்டு வாகனங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதே என் கனவு.
இந்தியாவிலும் தமது தொழில்நுட்பம் அறிமுகமாகும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமது கண்டுபடிப்பை எடுத்து கொண்டு அனைத்து வாகன நிறுவனங்களின் கதவுகளை தட்டியதாகவும், ஒரு இடத்திலிருந்தும் தமக்கு சாதகமான பதிலை பெற முடியவில்லை என்றும் நினைவுகூர்ந்தார்.
எனவே தான் தாம் ஜப்பான் அரசின் கவனத்திற்கு தமது கண்டுபிடிப்பை எடுத்து சென்றதாக கூறினார். தமது கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ஜப்பான் அரசு, அதற்கு அவர்கள் நாட்டில் அதனை வெளியிட உரிய அனுமதி வழங்கி கவுரவித்துள்ளதாக குறிப்பிட்டார்.