மாஸ்க் அணியவில்லை என்றால் மயானம் தான்.. கோவையில் மரண பயத்தைக் காட்டி விழிப்புணர்வு
கோவை: அரசூர் ஊராட்சியில் மாஸ்க் போடாமலும் மாஸ்க்கை முறையாக அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த பொதுமக்களை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொரோனா ஆபத்து குறித்து எடுத்துரைத்து வினோதமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மாதம் உச்சத்திலிருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 35 ஆயிரத்தைத் தாண்டியது.
மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் வெளியில் ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
குட் நியூஸ்.. 13,000க்கு கீழ் சென்ற கொரோனா.. ஆனால் இந்த 2 மாவட்டங்களில் கட்டுக்குள் வராத வைரஸ்
தமிழ்நாட்டில் ஊரடங்கு
இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறிச் செல்லாமல் இருக்க முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பரவல் மெல்லக் குறையத் தொடங்கியது. குறிப்பாக வைரஸ் பாதிப்பு உச்சத்திலிருந்த சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
கட்டுக்குள் வராத கொரோனா
இருப்பினும், மேற்கு மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை கருமத்தம்பட்டி அடுத்த அரசூரில் பொது இடங்களில் மாஸ்க்குகைகளை அணியாமல் சுற்றி திரிந்த மக்களுக்கு வினோதமான முறையில் ஊராட்சி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மாஸ்க் இல்லை என்றால் மயானம் தான்
அரசூர் பகுதியில் சாலையோர பகுதிகளில் மாஸ்க்குகளை அணியாமல் இருந்தவர்களை முழு பிபிடி உடை அணிந்தவர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றினர். பிறகு அவர்களை அரசூர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். மயானத்தைச் சுற்றிக் காட்டி கொரொனாவால் ஏற்படும் ஆபத்துகளை அவர்களுக்கு விளக்கினர். மாஸ்க் அணியாமல் இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவ்வளவு ஏன் மயானத்தில்கூட புதைக்க இடமில்லை என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
ஏன் செய்தோம்
இந்த முறை சற்று அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும்கூட, கொரொனா ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலேயே இந்த முறையைப் பின்பற்றியதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த அரசூர் ஊராட்சியில் கடந்த சில வாரங்களாகவே தினசரி 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
கோவையில் அதிகம்
தமிழ்நாட்டில் 24ஆவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் 12,772 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாகக் கோவையில் 1728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை தவிர ஈரோட்டில் மட்டுமே வைரஸ் பாதிப்பு ஆயிரத்திற்கும் மேலாக (1295) உள்ளது.