அப்போ விஜயபாஸ்கர்! இப்போ ஆறுகுட்டி எம்எல்ஏ! ஹெல்மெட் போடலை.. பாயுமா வழக்கு?
கோவை:கோவையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த இரு சக்கர வாகன அணிவகுப்பில் அதிமுக எம்எல்ஏ உள்பட யாரும் ஹெல்மெட் அணியாதது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் இல்லாமல் போக விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன் என்று அவர் உயர்நீதி மன்றத்தில் மன்னிப்பு கோரி, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த சில நாட்களில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் இதே போன்று ஹெல்மெட் அணியாமல் சென்றிருப்பது சர்ச்சையாகி வருகிறது.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோயம்புத்தூரில் நடந்த இரு சக்கர வாகன அணிவகுப்பில் அதிமுக எம்எல்ஏ உள்பட யாரும் ஹெல்மெட் அணியாதது பெரும் சர்ச்சையாகி வருகிறது. எம்ஜிஆரின் 102ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக கவுண்டம் பாளையம் தொகுதி, காளப்பட்டி பகுதியில் இருசக்கர வாகன அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவை மாநகர் மாவட்டஅவைத்தலைவர் ஆறுக்குட்டி எம்எல்ஏ, தலைமையில் நடைபெற்றது. அதில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கேஆர் ஜெயராமன், 35வது வட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகன அணி வகுப்பில் யாரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.
மக்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஒருவரே ஹெல்மெட் அணியாமல் அனைவரும் பார்க்கும் வண்ணம் வலம் வந்திருப்பது அனைத்து தரப்பினரிடையே விமர்சனத்தை எழுப்பியுள்ளது. விரைவில் அதற்காக அவர் மீது வழக்கு பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.