கொரோனாவில் இருந்து மீண்ட அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் - மருத்துவர்களுக்கு நன்றி
கொரோனா வைரஸ் பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்.
கோவை: கொரோனா வைரஸ் பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அம்மன் அர்ஜூனனும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பினர். எம்எல்ஏ, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன், கடந்த வாரம் அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோருடன் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு கோவை திரும்பினார். அப்போது அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் கோவை சிங்கா நல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அம்மன் அர்ஜூனன் குடும்பத்தினர் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏவின் மகள், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
கொரோனா போயிரும்னத கூட பொறுத்துகிட்டோம்.. 13 முறை மெல்லனும், வல்லரசு ஆகலாம்னு விட்டீங்க பாரு ஒரு கதை
எம்எல்ஏவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அம்மன் அர்ஜூனனும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பியுள்ளனர். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சிறப்பாக சிகிச்சை அளித்து கவனித்துக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அம்மன் அர்ஜூனன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி
இதே போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மதனந்தபுரம் பழனி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் வீடு திரும்பினார். அப்போது எம்எல்ஏவின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்தும்,அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும் அவரை வரவேற்றனர். அனைவருக்கும் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி நன்றி தெரிவித்து கொண்டார்.
தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.