கோவையை கைப்பற்றலாம் என்ற ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது: எஸ்.பி. வேலுமணி
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தை கைப்பற்றிவிடலாம் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் ஈச்சனாரியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசியதாவது:
திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வந்து பல்வேறு பொய் புகார்களை கூறிக் கொண்டு சென்றுள்ளார் எப்படியாவது கோவை மாவட்டத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் கனவு காண்கிறார்.
ஸ்டாலின் விபூதியை பூச மறுத்து இழிவுப்படுத்தி விட்டார்.. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. கருணாஸ்
கோவை- ஜெ. கோட்டை
இந்த மாவட்டம் ஜெயலலிதாவின் கோட்டை. ஒருபோதும் இதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழக முதல்வர் கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டுவந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளோம்.
ஏமாற்றி வாக்கு கேட்ட திமுக
வாக்கு கேட்க நமக்கு மட்டுமே தகுதி உள்ளது. திமுகவிற்கு வாக்கு கேட்க எந்த தகுதியும் இல்லை. அவர்கள் எதுவும் செய்யவில்லை. பொய் மட்டுமே பரப்புவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள். முற்றிலும் புறம்பான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். தேர்தல் நேரத்தில் மொத்த மக்களையும் ஏமாற்றி வருபவர்கள் திமுகவினர்.
எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர்
தேர்தலுக்குப் பிறகு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். சாதாரண விவசாயி அதிமுகவில் முதலமைச்சர் ஆகலாம். மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். அது உறுதி. தலைமைக்கழகம் நமக்கு என்னென்ன வேலைகளை கொடுக்கிறதோ அந்த வேலைகளை நாம் செய்ய வேண்டும்.
சென்னை மழை
கழகத் தொண்டர்கள் பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் பல்வேறு நலத் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். மழைக்காலத்தில் சென்னையில் 3 ஆயிரத்து 400 இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. இப்போது அனைத்து இடங்களும் சரிசெய்யப்பட்டது. கடந்தவாரம் 20 சென்டிமீட்டர் மழை பெய்தது. இரண்டுமணி நேரத்தில் அப்படியே தேங்கிய மழை நீர் வடிந்து விட்டது.
நில அபகரிப்பு இல்லை
மக்கள் நம்மை எப்பொழுதும் ஆதரிப்பார்கள். திமுகவைப் பொறுத்தவரை அவதூறு பரப்புவதே குறிக்கோள். ஜெயலலிதா அரசு வந்தவுடன் கட்டப்பஞ்சாயத்து இல்லை; நில அபகரிப்பு இல்லை; கடைகளில் வசூல் கிடையாது. உறுதியாக 2021ல் எடப்பாடி தான் முதலமைச்சர். இதை யாரும் மாற்ற முடியாது.
மேயர் பதவியையும் கைப்பற்றுவோம்
வரும் சட்டசபை தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை அரவணையுங்கள். புதிதாக வந்திருக்கும் பொறுப்பாளர்கள் கட்சிக்காக இருந்தவர்களை மதியுங்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். மேலும் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க வேண்டும்.
மீண்டும் அதிமுக ஆட்சி
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் முதல்வரை நேசித்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் ராசி மறுபடியும் நாம் ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார்.