செண்டை மேளம் முழங்க... வண்ணத்துப்பூச்சிகள் நடனமாட கோவையில் முதல்வருக்கு அசத்தல் வரவேற்பு
கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வருக்கு செண்டை மேளங்கள் முழங்க, வண்ணத்துப்பூச்சிகள் நடனமாட பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை: செண்டை மேளங்கள் முழங்க... வண்ணத்துப்பூச்சிகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் நடனமாட... கேரளாவின் கதகளி ஆட்டம் ஒரு பக்கம் நடைபெற, மகாவிஷ்ணுவின் அவதார ரூபங்கள் அருள்பாலிக்க கோவை நகர வீதிகள் இன்று களைகட்டியிருந்தன. ஓணம் பண்டிகையோ என்று எண்ணும் அளவிற்கு இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தி விட்டனர் கோவை அதிமுக நிர்வாகிகள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்துக்காக கோவை சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபைத் தொகுதிகளிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இன்று காலை 8 மணிக்கே தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே, கோவை முழுவதும் பிரம்மாண்ட கட்அவுட்கள் , பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
#WATCH | Tamil Nadu: Coimbatore prepares to welcome CM Edappadi Palaniswami who is scheduled to hold a roadshow in the city today pic.twitter.com/42YAPYJoYt
— ANI (@ANI) January 23, 2021
அது மட்டுமல்லாது செண்டை மேளங்களும் கேரளாவின் பாரம்பரிய நடனங்கள் ஆடும் கலைஞர்களும் நகர வீதிகளில் நடனமாடி வரவேற்பு கொடுத்தனர். தேர்தல் பிரச்சாரம் போல அல்லாமல் திருவிழா கோலமாக காட்சி அளிக்கிறது கோவை மாநகரம்.