கோவையில் பரவும் துப்பாக்கி கலாசாரம்? துப்பாக்கியுடன் சுற்றிய இருவர் கைது.. அச்சத்தில் கோவை மக்கள்
கோவை: கோவையில் உள்ள தனியார் விடுதியில் ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள், பட்டா கத்தி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை நகர்ப் பகுதியில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சுற்றுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை இரத்தினபுரி போலீசார் காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் விடுதி ஒன்றில் இரண்டு பேர் போலியான முகவரி கொடுத்துத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் ஒருவர் பெயர் சாகுல்ஹமீது, மற்றும் மற்றொருவர் பெயர் சக்தி என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இருவரும் அந்த விடுதியில் தனித்தனியாக இரண்டு அறைகளை எடுத்துத் தங்கியுள்ளனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் தனியறையில் கிடந்த தொழிலதிபர்: தற்கொலை முயற்சி? போலீஸ் விசாரணை
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து , அவர்கள் இருந்த அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு இரண்டு ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள், பத்து சிலிண்டர்கள், ஒரு பட்டா கத்தி மற்றும் புல்லட் ஒரு பாக்கெட் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைப் பறிமுதல் செய்த இரத்தினபுரி போலீசார் தங்கும் விடுதி காந்திபுரம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அந்த காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது, சக்தியை ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் காட்டூர் போலீசாரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து காட்டூர் போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த சில மாதங்களாகக் கொள்ளை,வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து வருகிறதோ என்று கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.