டெல்லி ரிடர்ன் வானதி சீனிவாசன்... கோவையில் உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..!
கோவை: பாஜக மகளிரணி தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கோவைக்கு திரும்பிய வானதி சீனிவாசனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து அசத்தியுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.
தொண்டர்களும், நிர்வாகிகளும் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட வானதி சீனிவாசன், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை எனக் கூறினார்.
கோவில்கள் எதிரில் உள்ள 'கடவுளை கற்பித்தவன் முட்டாள்' கல்வெட்டுகளை அகற்றாவிட்டால்.. பாஜக எச்சரிக்கை
நேற்று பதவியேற்பு
பாஜக மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் நிர்வாகிகளும் நேற்று வானதியை சந்தித்து அறிமுகமாகி கொண்டதோடு வாழ்த்தும் தெரிவித்தனர்.
டெல்லி ரிடர்ன்
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகம் வருவதால் அவரை வரவேற்க வேண்டிய தனது டெல்லி நிகழ்ச்சிகளை ஒரே நாளில் முடித்துக்கொண்டு இன்று கோவை திரும்பினார் வானதி சீனிவாசன். பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்ற பொறுப்புடன் கோவைக்கு முதல்முறையாக வருகை தருவதால் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியுள்ளனர்.
பாஜக ஆட்சி
பேண்டு வாத்தியங்கள் முழங்க, பூ மழை தூவி, வானதியை அவர்கள் வரவேற்றனர். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட வானதி சீனிவாசன், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பதே லட்சியம் எனத் தெரிவித்தார். மேலும், தற்போதைய சூழலில் அதிமுக -பாஜக கூட்டணி வலிமையாக, பலமாக உள்ளதாகவும் கூறினார்.
வாழ்த்து
வேல் யாத்திரை விவகாரத்தில் தாம் கூறிய கருத்தை அதிமுக தவறாக புரிந்துகொண்டதாக விளக்கம் அளித்தார். இதனிடையே விமான நிலையத்தில் இருந்து வீடு சென்ற பின்னரும், பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்று முழுவதும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.