மோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்
கோவை: பேனர்கள் வைப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று பாமக ராஜ்யசபா எம்.பி., அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணின் ஸ்கூட்டர் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மோதியதில், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் அடுத்த வாரம் மகாபலிபுரம் வரும் போது, அவர்களை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசு தீவிரமாக இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி அளித்த பேட்டியில், சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் வருகைக்காக பேனர்கள் வைப்பதைத் தமிழக அரசு முற்றிலும் தவிர்க்க ண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், சாலையோரங்களில் பேனர்கள் வைப்பது தேவையற்றது. மற்ற நாடுகளில் இது போன்ற கலாசாரம் கிடையாது. ஆனால் இங்கு தான் பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாசாரம் போன்றவை உள்ளது. இது தேவையற்றது. சென்னை வரும் சீன அதிபருக்கு பேனர் வைக்க அரசு விதிவிலக்கு கேட்டு இருக்கின்றார்கள்.
பேனர்கள் வைக்க கூடாது என்பது பா.ம.க வின் கொள்கை. அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் இதை தவிர்க்க வேண்டும். நீட் மருத்துவ படிப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு நீட் சேர்க்கை குறித்தும் விசாரித்து, அதில் தவறு செய்த மாணவர்களையும் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்தார்.