திரும்பி வந்துட்டேனு சொல்லு.. அரிசி ராஜாடா.. 8 மாசங்களுக்கு பிறகு கூண்டிலிருந்து ரிலீஸான யானை
கோவை: எட்டு மாதங்களாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அரிசி ராஜா யானை, தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த யானைக்கு தற்போது முத்து என பெயரிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகே 2017-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி ஒரு காட்டு யானை நான்கு பேரை மிதித்துக் கொன்றது. இது குறித்து தகவலறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர்.
அதில் மூவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து ஜூன் 3ஆம் தேதி அந்த காட்டுயானை வரகழியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அர்த்தநாரிபாளையம், நவமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விளைநிலங்களை நாசப்படுத்தியக் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியை கொன்றது.
கொரோனா.. பெங்களூரை கைவிட்ட கர்நாடக அரசு? மருத்துவ வழிகாட்டலுக்கு கூட ஆளில்லை.. கடும் பீதியில் மக்கள்
மீளா சோகம்
அந்தச் சோகத்திலிருந்து மீளாத நேரத்தில் மே 26ஆம் தேதி முதியவர் ஒருவர் அந்த யானையால் கொல்லப்பட்டார். அதனால் வனத்துறையினர் சுயம்பு, பரணி எனும் இரு கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் மே 29ஆம் தேதி முதல் ஈடுப்பட்டனர். இதற்கிடையில் நவம்பர் 9ஆம் தேதி அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் எனும் விவசாயி யானையால் கொல்லப்பட்டார்.
ஆனைமலை புலிகள் சரணாலயம்
காட்டுயானையின் தொடர் அட்டகாசம் பெரும் பேசுபொருளானது. அந்த யானை அரிசியை விரும்பி தின்பதால் "அரிசி ராஜா" என அழைக்கப்பட்டது. அதன்பின் வனத்துறையினர் யானைப் பிடிக்கும் பணி மிகத் தீவிரமானது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து தலைமையில் மருத்துவக் குழுவினர், வன அலுவலர்கள் யானைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு நவம்பர் 14ஆம் தேதி நள்ளிரவு காட்டுயானை பிடித்தனர்.
பொள்ளாச்சி டாப்ஸ்லிப்
பிடிக்கப்பட்ட காட்டுயானை பொள்ளாச்சி டாப்ஸ்லிபில் உள்ள வரகழியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு கவனிக்கப்பட்டுவந்தது. எட்டு மாதங்களாக கூண்டிலிருந்த அரிசி ராஜாவுக்கு பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், கட்டுப்படுதல் உள்ளிட்டப் பயிற்சிகள் அளித்துவந்தனர்.
பூஜைகள்
அதன் பின் ஜூலை 21-ஆம் வெளியே விடுவிக்கப்பட்ட அரிசி ராஜாவிற்கு பூஜைகள் செய்யப்பட்டு வரவேற்கப்பட்டது. இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் சேவியர் ஆரோக்கிராஜ் கூறுகையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு வெளியே வந்த 'அரிசி ராஜாவுக்கு" வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளது.
கண்காணிப்பு
மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாகன்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பியுடன் அரிசி ராஜா (எ) முத்துவும் பங்கேற்பான் என தெரிவித்தார் அந்த வனத்துறை அதிகாரி.