அத்திக்கடவு, அவினாசி திட்டத்துக்கு இம்மாதத்துக்குள் அடிக்கல்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கோவை:அத்திக்கடவு, அவினாசி திட்டத்துக்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை வையம்பாளையத்தில் உழவர் பெரும்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இதையடுத்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நாட்டு மாட்டுக் கன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் அதிக விவசாயிகள் சேர்ந்துள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ 6,648 கோடியே 35 லட்சம் பயிர் காப்பீடு வழங்கப் பட்டு உள்ளது.
வேளாண்துறையில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு தான் அதிக நிதி பெற்றுத் தந்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க, இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம், ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பது நிறுத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்று பேசினார். பின்னர், தமிழ்நாடு ரேக்ளா கிளப் அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ரேக்ளா வண்டி ஒன்றை பரிசளித்தனர்.