பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு… 6 டி.எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை கடுமையான பிரிவுகளில் தண்டிக்க கோரியும், முறையான விசாரணை நடத்த கோரியும் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மகன் திருநாவுக்கரசு (27), அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், முக்கிய புள்ளிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த வழக்கு கடந்த 12ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் கெடுபிடி.. ஒரே நாளில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது.. கடும் சோதனை!
இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று பொள்ளாச்சியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், 6 டி.எஸ்.பி தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.