இல்லைங்க.. ஆடியோவில் மிரட்டும் குரல் என்னுடையது கிடையாது- பார் நாகராஜன் மறுப்பு
கோவை: பொள்ளாச்சியில் பெண்ணை மிரட்டுவது போன்று வெளியான ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என பார் நாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து தனிமையான இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் அந்த பெண்களை பணியவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் புகார் கொடுத்தது தொடர்பாக பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜனின் பெயர் அடிப்பட்டது.
உன் புருஷனை தூக்கறேன்.. கேஸ் வாபஸ் வாங்கிட்டு ஓடிடு.. பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ் ஆடியோ
பார் நாகராஜன்
அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் இன்று ஒரு சில ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் பார் நாகராஜன் பெண்ணை மிரட்டுவது போல் இருந்தது.
வாபஸ் வாங்க முடியாது
பார் நாகராஜன் என கூறிக் கொள்ளும் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து பொள்ளாச்சி சம்பத் பெயரிலும், கோகிலா பெயரிலும் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கி விடுமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண்ணோ நான் வாபஸ் வாங்க மாட்டேன் என்கிறார்.
ஆவதை பார்த்துக்கோ
அதற்கு பார் நாகராஜ் என கூறும் நபர் உன் கணவரையும் உன் குடும்பத்தையும் தூக்கிவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார். அதற்கு அந்த பெண் உன்னால் ஆவதை பார்த்துக் கொள், என்னால் ஆவதை நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார்.
பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதி
இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவை எஸ்பி அலுவலகத்துக்கு புகார் கொடுக்க பார் நாகராஜன் வந்திருந்தார். புகார் கொடுத்துவிட்டு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோவில் பேசியது நான் இல்லை. பாலியல் வழக்கில் என்னை சிக்க வைக்க இதுபோன்று பரப்பப்படுகிறது என்றார்.