மாட்டிறைச்சி குறித்து ஃபேஸ்புக் பதிவு- கோவை நிர்மல்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி
கோவை: மாட்டிறைச்சி விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த கோவை திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாலர் நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாட்டிறைச்சி உண்பது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நிர்மல் குமார், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு சவால்விடுத்திருந்தார். இது தொடர்பாக கோவை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்தது நிர்மல்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இக்கைது சம்பவத்தை கண்டித்து கோவையில் பல்வேறு இயக்கங்கள் ஒன்றாக இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
அப்போது பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், நிர்மலகுமாரை போலீசார் தனிமை சிறையில் அடைத்து துன்புறுத்துகின்றனர் என குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக அரசு அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.
இதனிடையே நிர்மல்குமாரின் ஜாமீன் மனு மீது கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஞானசம்பந்தம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.