என்னது எடிட்டா? நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்!
அமைச்சர் எ.வ.வேலு இதை நிரூபித்தால், அரசியலை விட்டே விலக தயார் என சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை.
கோவை : "ஒரிஜினல் வீடியோவை அமைச்சர் எ.வ.வேலு சொல்லும் இடத்தில் தருகிறோம். அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைப்போம். வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிருபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்." என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், பணப்பட்டுவாடா பற்றி அமைச்சர் கே.என்.நேரு பேசுவதாக உள்ளது. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என திமுக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். அதற்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார்.
எங்க முதல்வர் + எங்க ஆளுநர்.. 2 பேரையும் விட்டுத்தர மாட்டோம்! அடடே.. அண்ணாமலை பேச்சை கவனிச்சீங்களா?
அண்ணாமலை ட்விட்டரில்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், "திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் பேச்சு - வீடியோ
தேர்தலுக்கு பணப் பட்டுவாடா பற்றி அமைச்சர் நேரு பேசுவதுபோல் அந்த வீடியோவில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் எ.வ.வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரிஜினல் வீடியோவை அமைச்சர் எ.வ.வேலு எங்கே கொடுக்கச் சொல்கிறாரோ அங்கே கொடுக்கிறோம், அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலை விட்டே விலக தயார்
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "ஈரோடு கிழக்கு தொகுதியில், அமைச்சர் நேரு 31ஆம் தேதிக்குள் பணம் கொடுத்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறார். எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியும், எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியாது என பேசுகிறார். நாளை தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவைக் கொடுக்க இருக்கிறோம். நான் அந்த வீடியோவை எடிட் செய்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு சொல்கிறார். அதை அவர் நிரூபித்துக் காட்டினால் நான் அரசியலைக் விட்டு விலகத் தயார். கே.என்.நேரு பேசியதை அப்படியே போட்டிருக்கிறேன். அது உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்ட்டால் முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.பாலு பேச்சு வீடியோ
மேலும், "டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டம் தொடர்பான திமுக விளக்கக் கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன். இது தொடர்பாக இளங்கோவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வீடியோ கட் செய்து எடிட் செய்யப்படாத வீடியோ, இடையில் எதுவும் எடிட் செய்யப்படவில்லை. அந்த வீடியோவில், ஒரு கோவிலை இடிப்பதை பெருமையாக எம்.பி டிஆர்.பாலு பேசினார். கோவிலை இடித்தால் ஓட்டு போடமாட்டார்கள் என்று சொன்னார்கள், எப்படி ஓட்டு வாங்குவது என்பது எனக்கு தெரியும் என அவர் பேசியிருக்கிறார்.
சவால்
தனது பேச்சு தவறு என உணர்ந்து, கடைசியில் பேச்சை முடிக்கும்போது நான் பெரிய கோவிலை கட்டியும் கொடுத்தேன் என்கிறார். அவர் கோவிலை கட்டி கொடுத்தது முக்கிய அம்சம் கிடையாது. ஒரு கட்சியின் மூத்த தலைவர், எம்.பி.யாக இருப்பவர் கோவிலை இடிப்பதை பெருமையாக பேசியிருக்கிறார். ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேலை செய்வதற்காக சென்ற அமைச்சர்கள் பேசியதை வீடியோவில் பார்த்தோம். மார்பிங் செய்து எடிட் செய்து வீடியோவை போட்டதாக அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருக்கிறார். அவருக்கு சவால் விடுகிறேன். எ.வ.வேலு அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார்." என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.