கையில் கங்கண கயிறு .. "ஒரு எம்பின்னு பார்க்காதீங்க.. திருமா மீது நடவடிக்கை எடுங்க".. அண்ணாமலை ஆவேசம்
திருமாவளவனை எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்
கோவை: கையில் கங்கண கயிறு கட்டிக் கொண்டு, திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அண்ணாமலை, "திருமாவளவன் சொல்வது எதுவுமே மனு ஸ்மிருதியில் இல்லை.. தனது பேச்சிற்கு அவர் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவதுதான் மக்களிடம் கோபத்தை அதிகமாக்கியுள்ளது... அதனால் திருமாவளவனை ஒரு எம்பி என்று பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்து பெண்களை இழிவாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.. அந்த வகையில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கையில் கங்கண கயிறு கட்டிக் கொண்டு, இந்து சமூக பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்யக் கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவனின் உருவ பொம்மையை பாஜகவினர் எரிக்க முயன்றனர்.. அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.. அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், திருமாவளவனின் உருவபடத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் கண்டனம் தெரிவித்தனர்... திருமாவளவனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறே உருவ பொம்மைகளை செருப்பால் அடித்தபோது, பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.
"பிராமணர்களை வரவழைச்சு ஏன் சடங்கு பண்ணீங்க?".. திருமாவளவன் மீது பாஜக மகளிர் அணி பாய்ச்சல்
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக, பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "இந்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது தவறு, தொடர்ந்து இந்து மதத்தை திருமாவளவன் இழிவுபடுத்தி வருகிறார்... எந்த விதமான இந்து தர்ம நூலிலும் திருமாவளவன் சொன்ன கருத்துகள் சொல்லப்படவில்லை. ஆங்கிலேயர்கள் மதமாற்றம் செய்ய எழுதிய நூலில் இருப்பதை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
இந்து தர்மம் இதை ஏற்கவில்லை... கூகுளில் மனுஸ்மிருதி என்று தேடினால் 30, 40 மனுஸ்மிருதி இருக்கு.. திரிச்சு சொல்லப்பட்டிருக்கு.. இவங்க சொல்லும் எதுவுமே அந்த நூலில் இல்லை.. கடந்த 2016-க்கு பிறகு பாஜக மிகப்பெரிய சக்தியாக வருவதை விரும்பாமல் குறி வைத்து பாஜக மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.. 2021 தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்... தமிழக பெண்களின் கோபத்தை பாஜக பிரதிபலிக்கிறது.
மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவன் பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பொதுச்செயலர் சிடி ரவி கண்டனம்
தேர்தலுக்கும், இந்த பிரச்சனைகளுக்கும் சம்பந்தமில்லை.. தேர்தலுக்காக இதை செய்தோம் என்றால், நாமளே செயற்கையாக ஒரு விஷயத்தை கையில் எடுப்பது போலாகிவிடும்.. அதனால் இந்த பிரச்சனை வேறு... கந்தசஷ்டி விவகாரத்தில் இந்து பெண்கள்தான் வெடித்து வெளியே வந்தனர்.. இதில்கூட, சாதாரண வீட்டில் இருக்க கூடிய பெண்கள், தங்கள் கோபத்தை பாஜக வழியாக வெளிப்படுத்துகிறார்கள்...
பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதுதான் பாஜகவின் வேலை.. பாஜக அமைதியை நிலைநாட்டக்கூடிய கட்சி. மனு ஸ்மிருதி விவாதம் செய்யும் விஷயம் அல்ல... தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகமாக்கியுள்ளது... அதனால் திருமாவளவனை ஒரு எம்பி என்று பார்க்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.