பூனை குட்டி வெளியே வந்துவிட்டது.. யார் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது.. வானதி சீனிவாசன் பேட்டி
கோவை: கூட்டணி கட்சி தலைவர்களை கலந்து ஆலோசிக்காமல் அதிமுகவே முதல்வர் வேட்பாளரை அறிவித்ததை பாஜக ஏற்கவில்லை என்பது அவர்கள் அவ்வப்போதும் வெளியிடும் கருத்துக்களில் தெரிகிறது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை தன்னிச்சையாக அறிவித்தது. கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கலந்து ஆலோசிக்கவில்லை.
இதனால் வருத்ததில் இருந்து வரும் பாஜக அவ்வப்போது தனது எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று பா.ஜ. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறியிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குணிந்து அம்மி அரைக்கும் ஷிவானி.. திண்டாடும் ரசிகர்கள்!
முதல்வர் வேட்பாளர்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சர்ச்சை நீடித்த போது, ஓ பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அதிமுக தலைமையால் முதல்வர் வேட்பாளராக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டார். அதிமுக அதன் பிறகு மக்களை கவர்வதற்கான அறிவிப்புகளை வெளியிடுவது, மக்கள் நல பணிகளில் அதிக கவனம் செலுத்துவது என தீவிரமாக இறங்கி உள்ளது. அத்துடன் பிரச்சாரத்தையும் துவக்கிவிட்டது.
டெல்லி தலைமை
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவே அறிவித்ததை ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து தெளிவு இல்லை. அந்த கட்சியின் மாநில தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல். முருகன் உள்ளிட்டோர் டெல்லி மேலிடமே தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று கூறிவருகிறார்கள்.
திருமாவளவன் குறித்து வானதி
கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மனுதர்மம் என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது. பா.ஜ. மனுதர்மத்தை பின்பற்றுகின்றதா? என்று விடுதலை சிறுத்தைகள் உட்பட அரசியல் கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.. ஏதோ நூலில் யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. திருமாவளவன் அரசியலுக்காக மனுதர்ம நூலை வைத்து பேசுகிறார். பெண்கள் குறித்து காலத்திற்கு ஒவ்வாமல் எழுதி வைத்து இருப்பது பெண்களுக்கு தேவையில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம், பாதுகாப்பு போன்றவையே இப்போது தேவை.
குஷ்புக்கு பதவி கிடைக்குமா
குஷ்புவுக்கு பதவி வழங்கப்படாமல் இருப்பதற்கு பெரியாரிஸ்ட் என்று சொன்னது காரணமில்லை. குஷ்புவுக்கும் கூடிய விரைவில் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை என்றாலும் அவரை போராட்டங்களுக்கு தலைமை ஏற்க பாஜக அனுப்புகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமையாக அதிமுக இருக்கிறது. முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அதிமுக தலைமையேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தி இருந்தால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு தெளிவான முடிவு இருந்திருக்கும்" இவ்வாறு கூறினார்.