"அரோகரா".. பழனிக்கு பாதயாத்திரை கிளம்பிய வானதி சீனிவாசன்.. “இதயம் கனக்குதே” - உருகிய அண்ணாமலை!
பழநிக்கு பாதை யாத்திரையைத் தொடங்கினார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
கோவை : கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், இன்று கோவையில் இருந்து பழனிக்கு தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
தான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பெற்ற வெற்றிக்காகவும், பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கான வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பாதயாத்திரையாகச் செல்வதாக வானதி சினிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதியின் பாதயாத்திரை குறித்துப் பேசிய அண்ணாமலை, இதயம் கனக்கிறது. அக்கா 150 கிலோ மீட்டர் நடக்கிறார். அதிக உறுதியுள்ள பெண்மணி எனத் தெரிவித்துள்ளார்.
இப்படித்தான் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறாங்க.. பிபிசி விவகாரம் குறித்து கிரண் ரிஜிஜூ விமர்சனம்
வானதி சீனிவாசன் பாதயாத்திரை
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்கின்றனர். இன்று மாலை 4 மணிக்கு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து பாதயாத்திரை தொடங்கியது. பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் பாஜக மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தொடங்கி வைத்த அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு இந்த பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பாதயாத்திரை தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர். சுமார் 50 பேருடன் கோவையில் இருந்து இந்த பாதயாத்திரையைத் தொடங்கினார் வானதி சீனிவாசன். தொடர்ந்து செல்லும் வழியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் பாதயாத்திரையில் இணைந்து கொள்வார்கள் என்றும் வானதி தெரிவித்தார்.
பிப் 2ஆம் தேதி
கோவையில் இருந்து இன்று புறப்பட்டுள்ள பாதயாத்திரை பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாகச் சென்று பிப்ரவரி 2ஆம் தேதி இரவு பழனியை அடைகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி காலை பழனிமலை முருகனை தரிசிக்கும் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் அன்றே கோவைக்குத் திரும்புகிறார்கள்.
என்ன வேண்டுதல்?
பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும், கோவை தெற்கு தொகுதியில் தான் பெற்ற வெற்றிக்காக பழனி முருகனுக்கு வைத்த வேண்டுதலை நிறைவேற்றவும் இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதயம் கனக்கிறது
பாதயாத்திரையை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "கொங்கு பகுதியில் பாஜக வளர 3 நாட்கள் நடை பயணமாக பழனி செல்கிறார் வானதி சீனிவாசன். என் இதயம் கனக்கிறது. அக்கா 150 கிலோ மீட்டர் நடக்கிறார். அதிக உறுதியுள்ள பெண்மணி. நான் வெளியில் இருந்து ரசித்துப் பார்த்துள்ளேன். போகும் வழியில் அவருக்கு வரவேற்பளிக்க பாஜகவினர் தயாராக உள்ளார்கள். இந்த புனிதப் பயணம் சரித்திர பயணமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.