பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இது தான் காரணம்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம்
கோவை: கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்திருந்தாலும், 6 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் தான் தற்போது சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், இருப்பினும் ஜி.எஸ்.டி.வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வர மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இதனைக் கூறினார்.
ஆபத்து.. ரஷ்ய நதியில் கலந்த 20,000 டன் எண்ணெய்.. உலக நாடுகளுக்கு புடின் தந்த வார்னிங்.. என்ன ஆனது?
பாஜக ஆட்சியில் தீர்வு
நாட்டில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு பாஜக ஆட்சியில் தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய எல்.முருகன், அதற்கு உதாரணமாக ராமர் கோவில் விவகாரம், காஷ்மீர் மாநிலத்துக்காக சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம் என பட்டியலிட்டார். மத்திய அரசின் சாதனைகளை சமூக இடைவெளியை கடைபிடித்து பாஜகவினர் வீடு வீடாக சென்று எடுத்துக் கூறிவருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
வாழ்வை புரட்டிவிட்டது
கொரோனா மக்களின் வாழ்க்கை முறையையே புரட்டிபோட்டுவிட்டதாகவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிவாரணமாக வழங்கியுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு மோடி கிட் வழங்கியுள்ளதாகவும், ஒரு கோடி பேருக்கு உணவு பொட்டலங்கள் தரப்பட்டுள்ளதாகவும் முருகன் தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்கள்
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்வதாகவும், எதிர்க்காலத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் முருகன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி.குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வருவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், எனினும் இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் முருகன் கூறினார். பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில் இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கண்டிக்கத்தக்கது
சாத்தான்குளம் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்க ஒன்று எனவும் முருகம் தெரிவித்தார். மேலும், சாத்தான்குளம் நிகழ்வை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவதாக கூறிய முருகன், காவல்துறையினர் சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றஞ்சாட்டுவது சரியல்ல எனத் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.