திராவிட கட்சிகள் வள்ளுவரை பயன்படுத்தி கொண்டனர்.. வானதி சீனிவாசன் பகிரங்க குற்றச்சாட்டு
திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
Recommended Video
கோவை: "திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர்தான்.. ஆனால் அரசியல் காரணங்களுக்காக, பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு, திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இந்துமத எதிர்ப்பைதான் செய்து கொண்டு வந்தார்கள். அதற்காக திருவள்ளுவரை அவர்கள் பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள்" என்று வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவள்ளுவர் சிலை விவகாரம் தமிழகத்தில் சூடு பிடித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நடைபெறும் ஒருசில அசம்பாவிதங்கள் காரணமாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை செயலாளர் வானதி சீனிவாசன் திருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு?
இந்து மத நூல்
"திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர்தான். இந்து மதத்தினுடைய நம்பிக்கைகளைதான் அவருடைய திருக்குறளில் அதிகமான இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பாஜகவோ, அல்லது எங்களது மற்ற அமைப்புகளோ கூறவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள், திருக்குறள் என்பது ஒரு இந்து மத நூலாகத்தான் இருந்திருக்கிறது.
பகுத்தறிவு
ஆனால் இடையில், திருவள்ளுவர், பொதுமுறை, அல்லது பொதுவாக இருக்கின்றன நபர் என்ற காரணத்திற்காக அல்லது அதை தங்களுடைய அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதற்காக, ஏனென்றால் பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு, திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இந்துமத எதிர்ப்பைதான் செய்து கொண்டு வந்தார்கள். அதற்காக திருவள்ளுவரை அவர்கள் பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள்.
பாஜக
இன்று, திருவள்ளுவரை அசிங்கப்படுத்தாமல், ஆபாசமாக சித்தரிக்காமல், இழிவுபடுத்தாமல், அவரை உயர்ந்த நிலையில் வைத்து போற்றக்கூடிய செயலைதான் பாஜக செய்கிறது. சில இடங்களில் சில நேரங்களில், சில நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்கலாம். ஆனால், திருவள்ளுவருக்கு மரியாதைக்குரிய வகையில் அவருக்கு ஒரு மாலை அணிவிக்கும்போது, அவர்களை கைது செய்கிறார்கள்.
கைது நடவடிக்கை
சிலையை அடிக்கிறவங்க, உடைக்கிறவங்க, அசிங்கப்படுத்தறவங்களை காவல்துறையினர் விட்டுவிட்டு, மரியாதை செய்பவர்களை கைது செய்வது என்பது தவறான தகவலை இந்த சமுதாயத்துக்கு தெரிவிக்கும். ஆகவே சட்டம் ஒழுங்கு என்ற விஷயம் இருந்தாலும்கூட, இந்த மாதிரி உணர்வுபூர்வமான விஷயங்களை, எங்கே, எது செய்தால், அந்த குறிப்பிட்ட தலைவருக்கு, மாமனிதருக்கு மரியாதை சேர்க்குமோ, அந்த செயலை காவல்துறையினர் செய்ய அனுமதிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் இருக்கு. இதுல இருந்து எந்த ஒரு கட்சியும், நாங்க வெளியில போறோம், கூட்டணியை முறித்து கொள்கிறோம் என்ற அறிவிப்பு வரவில்லை என்று சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணி இன்றுவரை தொடர்வதாகத்தான் அர்த்தம். அதனால் உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறபோது, அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் தொகுதிகள் ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படும்.