கோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்!
கோவை: கோவையில் மலிவு விலை நாப்கினை தயாரித்த கோவை முருகனாநந்தனை பிராவோ சந்தித்து பேசினார்.
கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம் (56). மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக் குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.
வணிகமுறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி நாப்கின்களை தயாரித்து வருகிறார்.
மனிதர்கள்
வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்' வார இதழ்உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது.
ஆஸ்கர் விருது
இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி 'பேட்மேன்' (Pad Man) என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். இந்த படத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். மேலும் இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகம்
கோவை முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறும் அவரது கண்டுப்பிடிப்பும் புதிதாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. விலங்கியல் பாடபுத்தகத்தில் மனித இனப்பெருக்கம் என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆச்சரியம்
கோவை முருகானந்தத்தை பார்க்க வேண்டும் என பிராவோ தரப்பு அவரது உதவியாளரை அணுகிய நிலையில் அந்த உதவியாளரும் யாரோ வெளிநாட்டுக்காரர் என குறிப்பிட்டிருந்தார். கடைசியில் முருகானந்தம் வீட்டு வாசலில் நின்றவர் யாரென பார்த்து ஆச்சரியமடைந்தார்.
பிராவோ
அவர் யாரெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான தியானே பிராவோதான். கரீபியனில்த தீவுகளில் உள்ள பெண்களுக்கும் இது போன்ற தொழில்நுட்பத்தின் கீழ் மலிவு விலை நாப்கின்களை தயாரிப்பது எப்படி என்பது குறித்து கேட்டறிந்தார் பிராவோ.
செயல்முறை விளக்கம்
சுமார் 2 மணி நேரம் கோவை முருகானந்தத்துடன் பேசிய பிராவோ அவரிடம் நாப்கின் தயாரிக்கும் முறையை கற்றுக் கொண்டதோடு இரு நாப்கின்களையும் தயாரித்து காட்டினார். மேலும் கரீபியன் தீவுகளுக்கு வந்து செயல்முறை விளக்கம் அளிக்குமாறு அருணாசலத்துக்கு அழைப்பு விடுத்தார்.