காவிரி குண்டாறு இணைப்பு.. எடியூரப்பாவின் பேச்சுக்கு.. சிடி ரவி சொன்ன பதில் இதுதான்!
கோவை: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தேசிய கட்சியான பாஜக அரசியலாக்க விரும்பவில்லை. இரு மாநிலங்களையும் பாஜக சமமாக பார்க்கிறது என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்தார்.
இரு மாநில விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். இந்த விவகாரத்தில் எவ்வித பாகுபாடும் காட்டப்படாது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி, மாநில தலைவர் முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சி.டி. ரவி கூறியதாவது:- நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் சில திட்டங்களை பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பார்கள்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தேசிய கட்சியான பாஜக அரசியலாக்க விரும்பவில்லை. இரு மாநிலங்களையும் பாஜக சமமாக பார்க்கிறது. இரு மாநில விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். இந்த விவகாரத்தில் எவ்வித பாகுபாடும் காட்டப்படாது. அந்தந்த மாநில முதல்வர்கள் அவரவர் விருப்பங்களைத் தெரிவிப்பது இயற்கைதான்.
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசுகையில், தமிழக பாரம்பரியத்தை மதிப்பவர் பிரதமர் மோடி. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் தமிழர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.