ஏழைகளுக்கு அடி.. இஎஸ்ஐ தொழிலாளர் பிள்ளைகளுக்கான மருத்துவ கல்வி கோட்டா ரத்து.. கோவை எம்.பி. கண்டனம்
கோவை: இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன்பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு, இஎஸ்ஐ மருத்துவமனைகளில், வழங்கப்பட்டு வந்த மருத்துவ படிப்பு கோட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கோவை லோக்சபா உறுப்பினர் பிஆர் நடராஜன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன் பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 20% கோட்டா வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கடுமையான கண்டனத்துக்குரியது. 1,948 ஆம் ஆண்டைய, தொழிலாளர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் நிதி திரட்டப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனை நடைபெற்று வருகிறது.
இஎஸ்ஐயில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இங்கு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வந்தது. கோவை சிங்காநல்லூரில் 32 ஏக்கர் பரப்பளவில் 520 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணம் இதற்கு பயன்படுத்தப்பட்டது.
100 மருத்துவ சீட்டுகளில் 65 சீட்டுகள் மாநில அரசுகள் ஒதுக்கப்பட்டவை. 15 சீட்டுகள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டவை. மிச்சமுள்ள 20 இருக்கைகள் ஐபி கோட்டா அடிப்படையில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியவை. ஆனால் இந்த வருடம் இந்த கோட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலை நாளை நாட்டுக்கு அர்ப்பணிப்பு!!
நீட் தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவ கனவை மோடி அரசு நசுக்கி விட்டது. இப்போது நாடு முழுக்க, 35 இஎஸ்ஐ மருத்துவமனைகளில் 300 இருக்கைகளை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கனவை மோடி அரசு கலைத்து விட்டது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் கனவுகளை மத்திய அரசு தொடர்ந்து நசுக்கி வருகிறது. எனவே இஎஸ்ஐ பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உள்ள கோட்டா அடிப்படையிலா சீட்டுகள் நிரப்பப்பட வேண்டும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்த ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாதம், ரூ.20,000 என்ற அளவுக்கும் குறைவாக சம்பளம் பெறுவோருக்கு இஎஸ்ஐ திட்டத்தின் பலன் உண்டு. இதுபோன்ற குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளும் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் கோட்டா நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.