பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணன் - சிபிஐ வலையில் சிக்கப்போகும் மேலும் 3 பேர்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவதாக மணி என்கிற மணிவண்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏற்கனவே திருநாவுக்கரசு சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புகாா் அளித்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மணிவண்ணனை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ அதிகாாிகள் கைது செய்துள்ளனா். மேலும் 3 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ஃபேஸ்புக்கில் நட்பாக பழகிய பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து நெருக்கமாக பழகும் நேரங்களில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறிப்பதோடு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பல அரசியல் தலைகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறினார் கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்போன்களில் இருந்த ஏராளமான வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதையும் காவல்துறையினர் மறுத்தனர்.
பெண்களை சிக்க வைத்த காமூகர்கள்
பொள்ளாச்சி மக்கினாத்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகியோர் அப்பாவி பெண்களை காதல் வலையில் விழ வைத்து நெருக்கமாக பழகி ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
ஆபாச வீடியோக்கள்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்ஃபோன்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியானது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து போராட்டங்கள் வெடிக்கவே தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
சிபிஐ விசாரணை
தமிழக அரசின் வேண்டுகோளின்படியும், நீதிமன்ற உத்திரவின் பேரிலும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை கடந்த மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
5வது குற்றவாளி கைது
இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக, மணி என்கிற மணிவண்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிவண்ணன் மீது தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது.
சிக்கிய மணிவண்ணன்
கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மணிவண்ணனை பாலியல் வழக்கில் கைது செய்ததற்கான ஆவணங்களை, கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் என 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் 3 பேருக்கு வலை
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறனர். விரைவில் மேலும் 3 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிபிஐ வலையில் சிக்கப்போகும் அந்த மூன்று பேர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அப்பாவி பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகும்.