கோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
கோவை: முதல்வர் பழனிச்சாமி கோவையில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே மாநிலம் முழுவதும் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
மு.க ஸ்டாலின் கிராமங்கள் தோறும் மக்கள் கிராம சபையை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் தனித்தனியாக பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் பழனிச்சாமி சேலம் எடப்பாடியில் தொடங்கி பல மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்திருக்கிறார். இன்று கோவையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. முன்னதாக ராஜவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி.
தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள பிரபல கோவில்களில் தரிசனம் செய்வது முதல்வரின் வழக்கம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதே போல இன்றைய தினம் கோனியம்மனை தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இரண்டு நாட்கள் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் பழனிச்சாமி.
பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஸ்டாலின் சொல்கிறார் அவரது சதித்திட்டம் முறியடிக்கப்படும் என்று தெரிவித்தார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.