மீண்டும் திரும்பி வந்தான் சின்னத்தம்பி.. மகிழ்ச்சி + கவலையில் பொள்ளாச்சி மக்கள்!
ஊருக்குள் வந்த சின்னதம்பி யானையை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
கோவை: திரும்பவும் கெத்தாக ஊருக்குள் வந்துவிட்டான் சின்னதம்பி.. அதான் மயக்க ஊசி போட்டு கொண்டு போய்விட்டார்களே என்று ஹாயாக ரோட்டில் நடந்த மக்கள், எதிரே வந்து கொண்டிருந்த சின்னதம்பியை பார்த்ததும் அலறி அடித்துகொண்டு ஓடினார்கள்.
கோவை அருகே ஊர்மக்களை தொந்தரவு செய்து கொண்டிருந்த சின்னதம்பி என்ற யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஒரு யானையை பிடிக்க 4 கும்கி யானைகளை கொண்டு வரப்பட்டு, சின்னதம்பிக்கு மயக்க ஊசியும் கடந்த 25-ம் தேதி போடப்பட்டது. வனத்துறை, போலீசார் என 50 பேர் விடிய விடிய போராடித்தான் சின்னதம்பியை பிடித்தனர்.
பிடிவாதம்
பிறகு பொக்லைன் லாரியை கொண்டு வந்து சின்னதம்பியை ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது லாரியில் ஏறவே சின்னதம்பி பிடிவாதம் பிடித்தது. உடனே கும்கி விஜய் தன் தந்தத்தால் ஆக்ரோஷமாக சின்னதம்பியின் பின் பகுதியை தாக்கியது.
திரும்பி வா...
இதில் சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டு தந்தங்களும் உடைந்தன. அதனால் ரத்த காயத்தோடுதான் சின்னதம்பி லாரியில் ஏறி சென்றது. சின்னதம்பி லாரியில் கிளம்பி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் கண் கலங்கினார்கள். இரண்டு நாளைக்கு சின்னதம்பியே திரும்பி வா.. என்ற ஹாஷ்டேக் இணையத்தில் உருவானது. பிறகு அதன் கழுத்தில் ஐடி காலரை பொருத்தி, டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு போய் வனத்துறையினர் விட்டார்கள்.
மீண்டும் சின்னதம்பி
ஆனால் சின்னதம்பி அங்கிருந்து மெதுவாக நடக்க ஆரம்பித்து இன்று காலை பொள்ளாச்சி பொள்ளாச்சி பகுதியிலுள்ள அங்கலக்குறிச்சி கிராமத்திற்கு வந்துவிட்டது. யானைதான் இல்லையே என்ற தைரியத்தில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த சின்னதம்பியை பார்த்ததும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.
மீண்டும் விரட்டும் வேலை
வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு மீண்டும் ஊருக்குள் வந்த சின்னதம்பி கண்டு மக்கள் சிலர் பயந்தும், மேலும் சிலர் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தந்தங்கள் முறிந்துள்ளதால், ஊருக்குள் வந்தது சின்னதம்பிதான் என்பதை உறுதி செய்த பொள்ளாச்சி வனத்துறையிர், திரும்பவும் காட்டுக்குள் விரட்டும் வேலையில் இறங்கி உள்ளனர்.