2 வேளை சாப்பாடு.. பாதுகாப்புக்கு 5 யானைகள்.. டாக்டர்கள் கவனிப்பு.. சமத்தா இருக்கிறான் சின்னத்தம்பி
சின்னதம்பியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி: சோளம், கரும்பு என 2 வேளை சாப்பாடு ஒரு பக்கமும், டாக்டர்களின் கவனிப்பு ஒரு பக்கமும் என 5 யானைகள் பாதுகாப்புடன் கூண்டுக்குள் தங்கியிருக்கிறான் சின்னதம்பி!
கடந்த சில தினங்களாகவே மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்த சின்னதம்பியை வனத்துறையினர் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதற்காக மயக்க ஊசியும் செலுத்தப்பட்டது. பின்னர் சின்னதம்பியை பிடித்து லாரியில் ஏற்ற கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் சின்னதம்பியை பார்த்ததும் கும்கி மாரியப்பன் தலைதெறிக்க மிரண்டு ஓடிவிட்டது.
வரகளியாறு
அதனால்தான் சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. லாரியில் ஏற மறுத்த சின்னதம்பியின் பின்பக்கத்தில் தும்பிக்கையால் சுயம்பு குத்தியே லாரியில் ஏற்றிவிட்டது. அடம்பிடித்த, முரண்டு பிடித்த சின்னதம்பி இறுதியாக லாரியில் ஏற்றப்பட்டு, வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
போகிற வழியில், சேத்துமடை சோதனைச் சாவடி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் சின்னதம்பிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் பத்திரமாக டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. இங்கு லாரியில் ஏற்றுவதுதான் போராட்டம் என்றால், அங்கே கூண்டில் அடைக்கவும் வனத்துறையினருக்கு பெரும்பாடாகி விட்டது.
சமத்து யானை
கலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்திருக்கிறது. கூண்டுக்குள் நுழைந்ததுமே, சின்னதம்பி சைலன்ட் ஆகிவிட்டிருக்கிறான். எந்தவித ஆரவாரம், சத்தம் இல்லாமல் நீண்ட நேரத்துக்கு அமைதியாக இருந்தானாம். வழக்கமான உற்சாகம் மிஸ் ஆகியிருக்கிறது.
டாக்டர்கள்
ஆனாலும் சின்னதம்பியை டாக்டர்கள் கவனித்து கொண்டே இருக்கிறார்கள். வலிநிவாரணி, ஊட்டச்சத்து ஊசிகளை செலுத்தி வருகின்றனர். சின்னதம்பி இருக்கும் பகுதிக்கு வேறு காட்டு யானைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 யானைகள் கூடவே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்கின்றன.
தென்னை ஓலைகள்
அதேபோல சின்னதம்பிக்கு சாப்பாடு தர, கவனித்து கொள்ளவும் பாகன்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு வேளை சோளம், பசுந்தீவனம், கரும்பு, தென்னை ஓலைகள் உள்ளிட்ட சாப்பாடு தரப்படுகிறது. விரைவில் சின்னதம்பி யானை, வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது