அழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டிய முதலமைச்சர்... கோவையில் 2-வது நாளாக பிரச்சாரம்..!
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Recommended Video
அதிமுகவின் பிரச்சார உத்திகள் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் முதல்வர் தரப்பு உற்சாகத்தில் உள்ளது.
அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முதலமைச்சரை திக்குமுக்காட வைத்துவிட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
சூறாவளி பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு வாக்குகேட்டு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னும் வேட்பாளர்களே அறிவிக்காத போதும், தொகுதிப் பங்கீடு முடிவடையாத போதும் அதிமுக தேர்தல் வேலைகளை விறு விறுவென பார்த்து வருகிறது.
வேடிக்கை காட்டி
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காளப்பட்டி அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது கட்சிக்காரர் ஒருவரது குழந்தை வேனில் இருந்த முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது. முதலமைச்சரிடம் சென்றதும் அந்தக் குழந்தை திடீரென அழுகத் தொடங்கியது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி அழுகையை நிறுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர்.
குதிரை வண்டி
இதனிடையே இந்த நிகழ்வு தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும், முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ள கூட்டங்களில் ரஜினி வேடமணிந்த ஒருவர் முத்து திரைப்பட பாணியில் குதிரை வண்டியில் நின்றவாறு இரட்டை இலை சின்னத்தை காட்டி ஆக்ஷன் செய்து கொண்டு செல்கிறார். இது பார்ப்பவர்களை ரஜினியின் ஆதரவு இரட்டை இலைக்கு தான் என்பது போல் தெரிந்தது.
ஆன்மிக கூட்டமா?
இதேபோல் வழக்கமான ஆடல் பாடல் கச்சேரிகளை தவிர்த்து அனுமான், கிருஷ்ணர், என கடவுள் வேடமிட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினருக்கு ஆசி வழங்குவது போன்று புது வித ஏற்பாடுகளை செய்திருந்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இது போதாதென்று எஸ்.பி.வி. ஆர்மி என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் சட்டை பையில் பேட்ஜ் அணிந்து பிரச்சார பணிகளை கவனித்தனர்.