திருமங்கலம் பார்முலா தெரியும்.. அதென்ன கோவை பார்முலா?.. ஹாட்ரிக் வெற்றிக்கு பக்கா வியூகம்
கோவை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடியோ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்முலாவை ஃபாலோ செய்து மக்களை சிந்திக்க வைக்கிறார்.
ஏற்கெனவே இரு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்டிரிக் வெற்றியை கொண்டாட பாடுபடுகிறது. அதற்காக பக்காவாக வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகிறது.
ஹாட் டிரிக் வெற்றி மட்டுமில்லை, ஜெயலலிதா இல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்ற சாதனையும் அதிமுகவை சேரும். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்எல்ஏ
அப்போது பெரும்பாலான மக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏவை தொடர்பு கொண்டு நாங்கள் ஓட்டு போட்டதற்கு காரணம் ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துதான், உங்கள் முகத்தை பார்த்து அல்ல, அதனால் அவர் கொடுத்த ஆட்சியை சசிகலாவிடம் கொடுக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். அந்த பழி நீங்கவும் அடுத்த தலைவராக எடப்பாடியார் உருவெடுக்கவும் வியூகங்கள் தயார் நிலையில் உள்ளன.
வித்தை
எல்லாம் ஜெயலலிதாவிடம் கற்றுக் கொண்ட வித்தையை முழுவதுமாக இறக்க முடிவு செய்து விட்டனர். தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தது. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு தேர்தல் பணிகளின் போது திமுகவே மீண்டும் ஆட்சியில் அமரும் என எதிர்பார்க்கப்பட்டது.
கட்டப்பஞ்சாயத்து
ஆனால் முதல்வர் ஜெயலலிதா கோவையில் வ உ சி மைதானத்தில் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டினார். ஜெயலலிதாவுக்காக வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதை பார்த்துவிட்டு திமுகவினரே சற்று ஆடி போனதாக தகவல்களும் இருந்தன. அப்போது மைக்கை பிடித்த ஜெயலலிதா திமுகவை வெளுத்தெடுத்தார்.
சோதனைகள்
திமுக ஆட்சியின் "சாதனைகள்" என்னென்ன என்பதை வெளியிட்டார். மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, நிலங்களை அபகரித்தல் ஆகியவற்றை மக்களின் கண் முன்னே கொண்டு வந்தார். கோவையில் சிறிய சிறிய தொழில்கள் அதிகம் உள்ள நகரம் என்பதால் அங்கு அடிக்கடி மின்வெட்டால் தொழில் பாதிக்கப்பட்டதை மக்கள் உணர்ந்தனர்.
அம்மா உணவகம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற வாக்குறுதியையும் அளித்தார் ஜெ. அப்புறம் என்ன கோவை தொழிலதிபர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் சிந்தித்து வாக்களித்தனர். அதன் விளைவு ஜெயலலிதா ஆட்சி அமைந்தது. அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களால் அவருக்கு 2016-லும் மக்கள் வாக்களித்தனர்.
முதல்வர் பிரச்சாரம்
அதே போன்ற ஒரு பிரச்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமியும் கையிலெடுத்துள்ளார். கோவையில் பேசிய எடப்பாடியார், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும், அராஜகம் செய்வார்கள், கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டுவார்கள், மின்வெட்டு ஏற்படும். எனவே திமுகவின் சலசலப்புக்கு ஏமாந்துவிடாதீர் என முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நினைவுப்படுத்துதல்
இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டை போல் இந்த முறையும் கோவை மக்கள் சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களித்து விடுவார்களோ என்ற லேசான அச்சம் திமுக மனதில் எழுந்துள்ளது. இதனால் திமுகவினரும் பொள்ளாச்சி சம்பவத்தையும் அதில் அதிமுக பிரமுகருக்கான தொடர்பையும் மக்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்தி வருகிறார்கள்.